சென்னை

மிழக வேளாண்துறை அமைச்சர் மறைவுக்குப் பல அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்  தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 11.15 மணிக்குத் தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு மரணம் அடைந்தார்.  அவருக்கு மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.  அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளித்த போதிலும் பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி : தமிழக வேளாண் அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவு தமிழ்நாட்டுக்கும், அதிமுகவுக்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது

எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் : மாண்புமிகு வேளாண்துறை அமைச்சர் திரு.  ஆர் துரைக்கண்ணு அவர்கள் மறைவெய்திய அதிர்ச்சிச் செய்தி கேட்டு பெருந் துயருற்றேன். அவரது மறைவிற்குத் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

அ.தி.மு.க.வில் மூன்று முறை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்று – 2016-ல் வேளாண்துறை அமைச்சராக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அம்மையார் அவர்களின் அமைச்சரவையில் பதவியேற்றவர் திரு. துரைக்கண்ணு.

சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் போதும் – துறை சார்ந்த மானியங்களில் பதிலுரையாற்றுகின்ற போதும், அவை மரபுகளுக்கு உட்பட்டு செயல்படும் அமைச்சராவார். அவரது மறைவு அ.தி.மு.க.விற்கும் – சக அமைச்சரவை சகாக்களுக்கும் பேரிழப்பாகும்.

மாண்புமிகு அமைச்சர் திரு. துரைக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – சக அமைச்சர்களுக்கும், முதலமைச்சர் திரு. பழனிசாமி ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்

மதிமுக பொதுச் செயலர் வைகோ : தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு அவர்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிர் நீத்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் தருகிறது.

பாபநாசம் தொகுதியில் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைக்கண்ணு அவர்கள், தமிழ்நாடு அமைச்சரவையில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். மிகவும் எளிமையானவர், தன்னடக்கம் மிக்கவர், அனைவரையும் மதிக்கின்ற பண்பாளர். அவரது மறைவினால் துயரத்தில் பரிதவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினருக்கும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்