சென்னை,

மிழகம் முழுவதும் நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. 43,051 போலியோ சொட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது.

நாடு முழுவதும் போலியோ எனப்படும் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தொடர்ந்து போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

பொதுவாக ஜனவரி 15, பிப்ரவரி 19ம் தேதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கி வருவது வாடிக்கை. ஆனால், தமிழகத்தில்  இந்த ஆண்டு ரூபெல்லா தடுப்பு ஊசி முகாம் நடைபெற்றதால் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் தேதி  மார்ச் 5 மற்றும்  ஏப்ரல் 2ம்தேதிக்கு மாற்றப்பட்டது.

இதுகுறித்து  தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நாளை (ஏப்ரல்2) நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 43,051 மையங்களில் சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை நடைபெற உள்ள போலியோ சொட்டு மருந்து முகாமில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுகிறார்கள்.

பெற்றோர்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.