சென்னை: தமிழ்நாடு முழுவதும பல கோடி மதிப்பிலான காவல்துறை, போக்குவரத்து துறை, சமூகநலத்துறை தொடர்பாக திட்டப்பணிகள்  மற்றும் கட்டிடங்கள், வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு பணிகளை  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 44 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட காவல் துறை, சிறைத் துறை கட்டடங்களைச் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 270 காவலர் குடியிருப்புகள், இரண்டு காவல் நிலையங்கள், இரண்டு காவல் துறை கட்டடங்கள், ஆறு உதவி சிறை அலுவலர் குடியிருப்புகள் ஆகியவற்றை மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மூன்று கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஓட்டுநர் தேர்வுத் தளத்துடன் கூடிய கட்டடத்தையும் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தடய அறிவியல் துறை சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ‘தடய மரபணுத் தேடல் மென்பொருள்’ செயலியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தார். இந்தச் செயலி மூலம் கடத்தப்பட்ட அல்லது காணாமல்போன குழந்தைகளை மரபணு ஒப்பீட்டு ஆய்வுமூலம் பெற்றோரிடம் ஒப்படைத்தல், மாநிலங்களிடையே செயல்படும் குற்றவாளிகளின் தொடர்பைக் கண்டறிதல், அடையாளம் காண இயலாத உடல்கள் மற்றும் மனித எலும்புகளை மரபணு ஆய்வு மூலம் அடையாளம் காணுதல், தொடர் குற்றங்களில் ஈடுபடுவோரைக் கண்டறிதல் ஆகிய பணிகளை விரைவாகவும், எளிதாகவும் மேற்கொள்ள முடியும்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையையும் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். நிதி ஆதரவுத் திட்டத்தின்கீழ் ஆயிரத்து 148 குழந்தைகளுக்கு நிதி உதவியும், 15 பேருக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.