தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக திகழ்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் (வயது 21).

இரு தினங்களுக்கு முன் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா ஆனந்த் சென்ற டாடா ஹேரியர் கார், நிலைதடுமாறி செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த யாஷிகா ஆனந்த் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். யாஷிகாவிற்கு கை, கால், இடுப்பு எலும்புகளில் முறிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. காரின் பின் இருக்கைகளில் இருந்த ஆண் நண்பர்கள் சிறிய காயங்களுடன் தப்பி விட்டனர்.

இந்த விபத்தில் யாஷிகாவின் தோழியான பவானி என்பவர் படுகாயமடைந்த சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், மோசமாக கார் ஓட்டி, உயிரிழப்பு ஏற்படுத்தியதாக நடிகை யாஷிகா ஆனந்த் மீது 279, 337, 304 என மூன்று பிரிவின்ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், யாஷிகாவிடம் போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். இந்த வாக்குமூலத்தில் காரை ஓட்டி வந்தது யாஷிகா தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. யாஷிகா அதிவேகமாக காரை ஓட்டி வந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்துக்குள்ளானதாகவும், அந்த காரில் இருந்த யாஷிகாவின் தோழி பவானி சீட்பெல்ட் அணியாததால் காருக்கு வெளியே தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மரணமடைந்ததாகவும் அவருடைய வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

நடிகை யாஷிகா, அவரது தோழி வள்ளி செட்டி பவானி(அமெரிக்காவில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர் ) , ஆண் நண்பர்கள் 31 வயதான சையது, 32 வயதான அமீர் ஆகியோர் சனிக்கிழமை அன்று சென்னையில் இருந்து காரில் புதுச்சேரி சென்றுள்ளனர்.

பின்னர் அங்கிருந்து இரவு 10 மணியளவில் காரில் புறப்பட்டு சென்னை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். யாஷிகா கார் ஓட்ட, முன்பக்கத்தில் வள்ளிசெட்டி பவானியும் பின் இருக்கைகளில் ஆண் நண்பர்களும் இருந்தனர்.

யாஷிகா ஓட்டி வந்த கார், டாடா ஹேரியர் வகையைச் சேர்ந்தது; இதன் கூரையில் ஒரு திறப்பு இருக்கும். யாஷிகா, மணிக்கு 140 முதல் 160 கிலோ மீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

இந்த நிலையில் யாஷிகாவின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய போலீசார் பரிந்துரைத்துள்ளனர். சிகிச்சையில் உள்ள யாஷிகா, குணமடைந்த பிறகு கைது செய்யப்படலாம் என்று்ம் தகவல்கள் வெளியாகியுள்ளன.