சென்னை

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நேற்று நடந்த முற்றுகை நிகழ்வையொட்டி சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பு அறிவிக்கும்  முன்பு இந்திய ரயில்வே இந்த மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பயண முன்பதிவை தொடங்கியது.   வெளி மாநிலத்தில் இருந்து வந்து தங்கி உள்ள பலரும் அவரவர் சொந்த ஊருக்குத் திரும்ப முன்பதிவு செய்தனர்.  ஆனால் ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக ரயில்கள் ஓடாததால் மே 3 வரை செய்யப்பட்ட முன்பதிவுகள் ரத்தானது.

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் நேற்று ஆயிரக்கணக்கான வெளி மாநிலத்தவர் நிலையத்தை முற்றுகை இட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.   சென்னையில் பல வட மாநிலத்தவர் தங்கள் ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்தன.  அவர்கள் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தை முற்றுகை இட்டு போராட்டம் நடத்தப்போவதாகத் தகவல்கள் வந்துள்ளன.

அதையொட்டி நேற்று காலை முதல் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  சுமார் நூற்றுக்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  சென்டிரல் ரயில் நிலையம் அருகே வட மாநிலத்தவர்கள் வருவதை அவர்கள் தடுத்து வருகின்றனர்.