சென்னை: எழும்பூரில் உள்ள பழைய காவல்துறை ஆணையர்அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். இந்த அருங்காட்சியகத்தை  பொதுமக்கள் பார்வையிடலாம்.

சென்னை  எழும்பூரில்  உள்ள பழைய காவல் ஆணையா்  அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது. இந்த கட்டிடம் ரூ.7 கோடியில் சீரமைக்கப்பட்டு  இரண்டு தளங்கள் அருங்காட்சியகமாக  மாற்றப்பட்டு உள்ளது.

இந்த அருங்காட்சியத்தை  பொதுமக்கள் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.  முன்னதாக அருங்காட்சியகத்தைக் திறந்து வைக்க வந்த முதல்வருக்கு காவல்துறையினர்  அணிவகுப்பு மரியாதை அளித்தனர் இந்த நிகழ்வுக்கு, மாநில  சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அருங்காட்சியகத்தை பொதுமக்கள்  பார்வைக்காக திறந்து வைத்ததுடன்,  அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார். இந்தநிகழ்ச்சியில்  தமிழக அமைச்சா்கள், காவல்துறை உயா் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

இந்த காவலா் அருங்காட்சியகத்தில் காவல்துறையின் முக்கிய வரலாற்று ஆவணங்கள், காவல்துறை தொடா்பான அந்த காலத்தில் இயற்றப்பட்ட அதி முக்கிய அறிவிப்புகள், தமிழக காவல்துறையின் தொடக்க கால சீருடைகள், பெல்ட், மோப்ப நாய்ப்படைகளின் புகைப்படங்கள், வரலாற்று சிறப்பு மிக்க செய்தி தொகுப்புகள், வயா்லெஸ் கருவிகள், காவல்துறை பதக்கங்கள், கலைப்பொருட்கள் ஆகியவை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆங்கிலேயா் காலத்தில் காவல்துறையினா் பயன்படுத்திய ஆயுதங்கள், பிஸ்டல் முதல் நவீன ரக துப்பாக்கிகள்  என ஏராளமான கருவிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளது.

ஏற்கெனவே கோவையில் காவலர்கள் அருங்காட்சியகம் உள்ள நிலையில், தற்போது, சென்னை எழும்பூரில் திறக்கப்பட்டுள்ளது.