சென்னை கோட்டூர்புரத்தில் வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. ஒன்றரை கோடியை கொள்ளையடித்தது யார் ? என்பது குறித்து விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை கோட்டூர்புரம் காவல்துறையினர் நேற்று முன்தினம் இரவு லாக் தெரு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது காவல்துறையை கண்டதும் அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் ஒருவர், தன்னிடம் இருந்த பைகளை சாலையில் வீசிவிட்டு தப்பி சென்றார். அந்த பைகளை திறந்து பார்த்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அவற்றை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று எண்ணிப் பார்த்தபோது, அதில் மொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 61 ஆயிரத்து 560 ரூபாய் இருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை வீசியவர் யார் ? என்பது தெரியவில்லை. இந்த பணம் ஹவாலா பணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கருதினர். பின்னர் பணத்தை அரசு கருவூலத்தில் காவல்துறையினர் ஒப்படைத்தனர்.

இதற்கிடையே நந்தனத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பாலசுப்பிரமணியன் என்பவர் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில் தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை கோடிக்கும் மேலான நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரத்தில் கைப்பற்றப்பட்ட பணம் எனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்டதாக இருக்கலாம் என கூறி இருந்தார்.

பாலசுப்பிரமணியம் வீட்டில் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துவிட்டு தப்பி சென்றபோது, காவல்துறையினரை பார்த்ததும், சாலையில் வீசி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

இதுதொடர்பாக அந்த பகுதிகளில் உள்ள சி.சி.டிவி கேமிரா காட்சிகளை சேகரித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்துக்குரிய ஆவணங்களை கொண்டு வருமாறு பாலசுப்பிரமணியனிடம் காவல்துறையினர் கூறினர். அவர் ஆவணங்களை எடுத்து வருவதாக கூறிச் சென்றார். கொள்ளை நடந்தபோது வீட்டில் அவரது மகள் இருந்துள்ளார். வீட்டில் ஆள் இருந்தபோதே கொள்ளை நடந்தது எப்படி ? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொதுவாக கொள்ளை சம்பவங்கள் நடக்கும்போது, கொள்ளையர்களை கண்டுபிடிப்பதிலும் பணத்தை மீட்பதிலும் காவல்துறையினர் படாதபாடு படுவார்கள். ஆனால் இந்த சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் கையில் இருக்கும் நிலையில் கொள்ளையன் யார் ? என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. கொள்ளையனை கண்டுபிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை காவல்துறையினர் பல்வேறு கோணங்களிலும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.