ஈரோடு: ஈரோடு அருகே தனியார் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்தால் அந்த பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில்  ஒருவர் பலியாகி உள்ளதாகவும்,  பலர் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே தனியார் ரசாயன ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இருந்து இன்று மதியம் அளவில் விஷவாயு வெளியேறியது. இதனால், அந்த பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு  மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், ரசாயன வாயுவை சுவாசித்த, நடுப்பாளையத்தைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் உயிரிழந்துள்ளளார். மேலும், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்ட 13 பேர் உடனடியாக மீட்கப்பட்டு  சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், விரைந்து வந்து நடவடிக்கை எடுத்தனர். மேலும், வாயு கசிந்த ஆலையை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி நேரில் ஆய்வு செய்தார்.