சென்னை: நெஞ்சு பொறுக்குதில்லையே! என்று  ஆன்லைன் வகுப்பு குறித்து பாமக தலைவர்  ஆவேசமாக கூறியுள்ளார்.

ஆன்லைன் வகுப்பு டார்ச்சரைத் தொடரும் ஈவு இரக்கமற்ற, பணத்தாசை பிடித்த தனியார் பள்ளிகளுக்குக் கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும் பாமக தலைவர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து பாமக தலைவர், ராமதாஸ் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

“நெஞ்சு பொறுக்குதில்லையே! பள்ளி வகுப்புகளை விரும்பும் குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளை விரும்புவதில்லை. ஆனாலும் ஆன்லைன் வகுப்புகள் மூலம் அந்தக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டு இருக்கின்றன பணம் பறிக்கும் பள்ளி நிர்வாக கும்பல்கள்!

சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகி விட்டது. நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக் கல்வித்துறையோ, ஆன்லைன் வகுப்புகளை ரத்து செய்வதாக அறிவிக்காமல், தனியார் பள்ளிகள் நோகாத வகையில் ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என்று பூசி மெழுகுகிறது. இது சரியா?

ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை என்று கல்வித்துறை அறிவிக்கும் வரை பணம் பறிக்கும் கும்பல்கள் திருந்தாது. பள்ளிக்கல்வித்துறை அறிவிக்காத நிலையில் இந்த டார்ச்சருக்கு எவ்வாறு முடிவு கட்டுவது? எப்படி முடிவு கட்டுவது? எந்த வழியில் முடிவு கட்டுவது?

ஆன்லைன் வகுப்பு டார்ச்சரைத் தொடரும் ஈவு இரக்கமற்ற, பணத்தாசை பிடித்த தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குக் கடுமையான பாடம் கற்பிக்கப்பட வேண்டும். சட்டத்தின் உதவியுடன், மக்களின் ஒத்துழைப்புடன், கல்வியாளர்களின் வழிகாட்டுதலுடன் விரைவில் அதை செய்து முடிப்போம்!”

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.