புதுச்சேரி: புதுச்சேரியில் பாமக வேட்பாளர்கள் தாக்கல் செய்திருந்த தங்களது வேட்புமனுக்களை திடீரென வாபஸ் பெற்று உள்ளனர்.

மொத்தம் 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. மே 2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு 16 தொகுதிகளும், பாஜகவுக்கு 9 தொகுதிகளும் அதிமுகவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. கூட்டணி,  தொகுதி பங்கீட்டின் போது உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணியில் இருந்து பாமக விலகியது.

தேர்தலில் பாமக 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவதாக கூறி, 10 வேட்பாளர்களை அறிவித்தது. 10 வேட்பாளர்களும் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந் நிலையில், பாமக வேட்பாளர்கள் 10 பேரும் தாங்கள் தாக்கல் செய்திருந்த வேட்புமனுக்களை திடீரென வாபஸ் பெற்றனர்.

கூட்டணியில் உரிய மரியாதை அளிக்கப்படும் என பாஜக உத்திரவாதம் அளித்ததால், வேட்புமனுக்களை வாபஸ் பெற்றதாக புதுச்சேரி பாமக மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார். தனித்து போட்டி என்று அறிவித்து விட்டு பாமக திடீரென வேட்பாளர்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்ற சம்பவம் புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.