சென்னை

மிழகத்தில் 17 தொகுதிகளில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட உள்ளது.

ஏற்கனவே நாம் தமிழர் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை கர்நாடகத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சி உரிய நேரத்தில் விண்ணப்பிக்காததால் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தைத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தமிழகம் உள்ளிட்ட 11 மாநிலங்களுக்கு ஒரே சின்னத்தை அந்தக் கட்சி பெற்றுள்ள நிலையில் நாம் தமிழர் கட்சிக்குத் தேர்தல் ஆணையம் மைக் சின்னத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.  தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியிலும் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகப் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி அறிவித்திருந்தது.

தற்போது தமிழகத்தில் 17 தொகுதிகளில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளதாகவும் மற்ற தொகுதிகளில் வேட்பாளர்கள் கிடைக்காததால் போட்டியிடவில்லை என்று பா.ம.ஐ.க தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.