டெல்லி:  75வது சுதந்தின தினத்தையொட்டி, ஆகஸ்டு 13 முதல் 15 வரை ‘வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்’ என பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டின் 75வது சுதந்திர தினம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.  இதை ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் மத்தியஅரசு சிறப்பாக கொண்டாடி வருகிறது. இதையொட்டி நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக அசாதி கா அம்ரித் மோட்சாவ் என்ற பெயரில் ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) என்ற நிகழ்ச்சிக்கும் மத்தியஅரசு ஏற்பாடு செய்து வருகிறது.

இதுதொடர்பாக பிரதமர் மோடி, பொதுமக்கள் வீடுகளில் கொடியேற்ற வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக  பதிவிட்டுள்ள டிவிட்டில்,’ இந்த ஆண்டு நாம் அசாதி கா அம்ரித் மோட்சாவ்  என்ற பெயரில் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அதை ஹர் ஹார் ட்ரையாங்கா (ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி) இயக்கம் மூலம் மேலும் வலுப்படுத்துவோம். ஆகஸ்ட் 13 முதல் 15ம் தேதி வரை உங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள். இந்த இயக்கம் தேசிய கொடியுடன் நமது இணைப்பை மேலும் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.