சேலம்: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, இன்று தமிழகத்தின் சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். இந்த  பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவு கோரும் வகையில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார். நேற்று (மார்ச் 18ந்தேதி) கோவையில்  பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற நிலையில், இன்று பிற்பகல் சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார். முன்னதாக அந்த பகுதியில் வாகன பேரணியில் கலந்துகொள்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் பிரதமர் பங்கேற்கும் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் என்பதாலும்,  சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இன்று சேலம் வரும் பிரதமரை வரவேற்க பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் உற்சாகத்துடன் வரவேற்க தயாராக உள்ளனர்.

பிரதமர் மோடி,  கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது சேலம் இரும்பாலை பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது சேலம் வராத நிலையில், தற்போது,  10 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிரதமர் மோடி சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். சேலம் அல்லது தருமபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளில் பாஜக, பாமக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுவதால், பிரதமல் சேலம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார்.

இந்த கூட்டத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  இனறைய கூட்டத்தில் பாஜக கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சியினர்  கலந்துகொள்கின்றனர். கூட்டணி கட்சியான பாமக சார்பில், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மற்றும், முதன் முறையாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்க உள்ளனர். அவர்களுடன் பாஜக பிரமுகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார்,  தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக,  பிரதமர் மோடி இன்று கேரளா மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்கிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் 12:50 மணியளவில் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி வருகிறார். பின்னர் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 1:50 மணி வரை பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். உரை முடிந்ததும் பிற்பகல் 1:55 மணிக்கு பொதுக்கூட்டம் மைதானத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சேலம் விமான நிலையம் சென்றடைகிறார். பின்னர் சேலம் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டி மற்றும் சேலம் விமான நிலைய ஆகிய பகுதிகள் ரெட் ஜோனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு பகுதியும் முமுமையாக சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்படுகிறது. பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு நேற்று மற்றும் இன்று சேலம் மாவட்டம் முழுவதும் டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வெளி வாகனம் பறக்கவும் தடை விதித்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால் பொதுக் கூட்டத்திற்கு வரும் அரசியல் கட்சி தலைவர்களின் வாகனங்களை சோதனை இடவும் தேர்தல் பறக்கும் படையினர் தயார் நிலையில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வருகையை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.