டில்லி:
தசரா பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடந்த ராவண வதம் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அம்பு எய்தி ராவணன் பொம்மைக்கு தீ வைத்தார்.
நவராத்திரி பண்டிகையான தசரா பண்டிகை நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப் பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் இறுதி நாளான இன்று டெல்லி செங்கோட்டை அருகில் அமைந்துள்ள ராம்லீலா மைதானத்தில் ராவண வதம் நடைபெறுவது வழக்கம்.
இவ்வாறு செய்தால், தீய சக்திகள் அழிந்து நாட்டுக்கு நன்மை கிடைக்கும் என்பது ஐதீகம். இதை வலியுறுத்தும் வகையில், அங்கு ராமர், லட்சுமணர், அனுமன் உருவங்களில் இருந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திலகமிட்டார். அதையடுத்து, அங்கு 80 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ராவணனின் உருவ பொம்மைக்கு மோடி அம்பு எய்தி தீ வைத்து எரிக்கப்பட்டது. அதன்பின் ராமர் பட்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடி பேசுகையில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவின் போது இந்த தசரா பண்டிகையை நாம் கொண்டாடி வருகிறோம். எனது அன்பான நாட்டு மக்களுக்கு நான் ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறேன். என்று கூறியவர்,
மின்சாரத்தை சேமித்தல், உணவுப் பொருட்களை வீண்டிக்காமை, நீரை சிக்கனத்துடன் பயன்படுத்துல் ஆகிய உறுதி மொழிகளை நாட்டுமக்கள் அனைவரும் ஏற்க வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
மேலும், பெண்களை நாம் உயர்வாக மதித்து வருகிறோம். பெண்களை மதிப்பது தொடர்பாக மன் கி பாத் நிகழ்ச்சியில் ஏற்கனவே நான் பேசியுள்ளேன். நம் பெண்கள் லட்சுமி தேவி போன்றவர்கள். பெண்களின் முன்னேற்றத்திற்காக நாம் உழைக்க வேண்டும் என குறிப்பிட்டார்.