பெங்களூரூ,

ஆதித்யா எல் 1 விண்கலம் லக்ராஞ்சியன் புள்ளியை அடைந்தையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செவ்வாய், நிலவைத் தொடர்ந்து சூரியனின் புறவெளிப் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்களை ஆராயும் முனைப்பில் ஈடுபட்டுள்ளது.  இதையொட்டி ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை வடிவமைத்து பிஎஸ்எல்வி – சி-57 ராக்கெட் மூலம் கடந்தாண்டு செப்டம்பர் 2ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசை பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் எனும் எல்-1 புள்ளியில், சமமாக இருக்கும். எனவே அந்தப் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டு ஆதித்யா விண்கலம், சூரிய புறவெளியின் வெப்பச் சூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆராய உள்ளது.

சுமார் 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்டு ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் சரியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பணிகளைப் பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். இந்த விண்கலம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குச் சூரியன் குறித்த ஆய்வை மேற்கொள்ளும். இதன மூலம் விண்வெளி துறையில் புதிய மைல் கல்லை இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது.

இதையொட்டி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் தனதுஎக்ஸ் தளத்தில்,

“இந்தியா மற்றொரு மைல்கல்லை உருவாக்கியுள்ளது. சூரியக் குடும்பத்தை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா-எல்1 வெற்றிகரமாக இலக்கை அடைந்துள்ளது

மிகவும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

நாட்டு மக்களுடன் இணைந்து நானும் இந்த அசாதாரண சாதனையைப் பாராட்டுகிறேன். மனிதக் குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்வோம்” 

என்று பதிவிட்டுள்ளார்.