சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ந்தேதி  வெளியானது. தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து, தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.  மறுகூட்டலுக்கும் ஏப்ரல் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்து இருந்தது.

தற்போது, வரும்  27ம் தேதி தற்காலிக மதிப்பெண் பட்டியல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்து உள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதியோரில் மறுகூட்டல், மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களின் மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி முதல் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் மறுகூட்டல் செய்யவும், மறுமதிப்பீடு செய்யவும் விண்ணப்பித்த மாணவர்களின் பதிவெண் பட்டியல்கள் scan.tndge.in என்ற இணைய தளத்தில் 27ம் தேதி மதியம் 2 மணிக்கு வெளியிடப்படும். இந்த பட்டியலில் இடம் பெறாதவர்களின் விடைத்தாளில் எந்த மதிப்பெண் மாற்றமும் இல்லை.

மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் 27ம் தேதி மதியம் 2 மணி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து திருத்தப்பட்ட தற்காலிக மதிப்பெண் பட்டியல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அசல் மதிப்பெண் சான்று வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வை   8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுதியிருந்த நிலையில், 91.3 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இவர் களில்,  மாணவிகள் 93.64 சதவீதம், மாணவர்கள், 88.57 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெறாதவர்கள் பிளஸ்-2 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரையிலும், பிளஸ்-1 சிறப்பு துணைத்தேர்வு ஜூன் 14-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரையிலும் நடைபெற இருக்கிறது.