சென்னை:

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழகத்தில் பிளஸ்2, பிளஸ்1 பொதுத் தேர்வுகள்  மார்ச் 2-ம் தேதி முதல் நடைபெற்று வருகின்றன.   பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் (மார்ச் 24) முடிவடைகின்றன. அதேபோல, பிளஸ் 1 தேர்வுகள் 26-ம் தேதியுடன் முடிவடைகின்றன. 10ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைத்துள்ள தமிழக அரசு, நடைபெற்று வரும் பிளஸ்1, பிளஸ்2  தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிளஸ்1, பிளஸ்2 பொதுத்தேர்வில் மீதமுள்ள தேர்வுகளையும் தள்ளி வைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம்,  கொரோனா அச்சுறுத்தலால் மாணவ, மாணவிகள் தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்திற்கு வருவதில் சிரமம்  இருப்பதால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை அரை மணி நேரம் தாமதமாக துவங்க உத்தரவிட்டு உள்ளது.

தற்கிடையில் தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று  தெரிவித்து உள்ளது.

3 தேர்வுகளே மீதம் உள்ளதால்,  திட்டமிட்டபடி 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

23ந்தேதி 11-ம் வகுப்பு உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதப் பாடங்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.

24-ம் தேதி 12-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும்,

26-ம் தேதி 11-ம் வகுப்பு வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான பொதுத்தேர்வுகளும் நடைபெற உள்ளது.

மேலும், சளி, இருமல் பாதிப்புள்ள  மாணவர்கள் முகக் கவசத்துடன் வந்தால் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்று தமிழகத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

”தேர்வு எழுத வரும் மாணவர்கள், தேர்வு எழுதுவதற்கு முன்னதாக கைகளை சோப்பு மூலம் நன்றாக சுத்தம் செய்த பிறகு, கைகளில் சானிட்டைசர் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகே தேர்வு மையத்துக்குள் அனுமதிக்க வேண்டும்.

மாணவ, மாணவியர் தங்களுடன் ஹேண்ட் சானிட்டைசரை எடுத்து செல்ல அனுமதிக்கலாம், சளி, இருமல் பாதிப்பு இருப்பவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் அவர்களைத் தேர்வு அறைக்குள் அனுமதிக்க வேண்டும்” என்று  குறிப்பிட்டு உள்ளது.