சென்னை: காய்ச்சல் காரணமாக சென்னை காவேரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷுக்கு டெங்கு காய்ச்சல் என தகவல் பரவிய நிலையில், அவருக்கு டெங்கு இல்லை, எச்1என்1 வைரஸ் பாதிப்பான பன்றி காய்ச்சல் என தெரிவித்துள்ளார்.

முதுநிலை மருத்துவ சார்ந்த படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இன்று 2022-2023 ஆம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு/பட்டைய படிப்பு(MD-MS/DIPLOMA) மற்றும் பல் மருத்துவர் படிப்பு (MDS) மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான (DNB) தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் முதுநிலை மருத்துவப் படிப்பில் 2,346 PG Seats இடங்களுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் வெளியிட்டார்.  தமிழ்நாட்டில் 23 அரசு கல்லூரிகள், 16 சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள முதுநிலை படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவ கல்லூரிகளில் 1,162 இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 763 இடங்களும் உள்ளன. 31 சுயநிதி கல்லூரிகளில் உள்ள 296 முதுநிலை பல் மருத்துவ இடங்கள், 94 பட்டப்படிப்பு இடங்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும், முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நாளை முதல் அக்டோபர் 6-ம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து,  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யபட்டு உள்ளது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷின் உடல்நிலை சீராக உள்ளது.  மருத்துவர்களின் ஆலோசனைக்கு பிறகு இன்னும் 2 நாட்களில் அன்பில் மகேஷ் வீடு திரும்புவார். அமைச்சர் அன்பில் மகேஷுக்கு எச்1என்1 வைரஸ் தான் அவருக்கு டெங்கு பாதிப்பு இல்லை, ஊடகங்களில் வரும் செய்தி தவறானது என்றார்.