சென்னை: சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு சர்ச்சையான நிலையில், இதுகுறித்து விசாரித்த  காவல்துறை ரவுடி ஒருவரை கைது செய்துள்ளது. அதையடுத்து, இது தொடர்பாக விரிவான விளக்கத்தை வெளியிட்டு உள்ளது.

பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் ஏற்கனவே காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், காவல் துறை பாதுகாப்பைமீறி, துணிச்சலாக பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் இருந்தார்களா இல்லையா, இந்த குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றபோது அவர்கள் எங்கு சென்றார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதில்,  பாஜக அலுவலகத்தில் நடந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் விவகாரம் – கைதானவர் மத ரீதியாகவோ அரசியல் சம்பந்தமாகவோ இந்த தாக்குதலில் ஈடுபடவில்லை, நீட் தேர்வில் பாஜகவின் நிலைபாட்டால் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையில் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலைபாட்டை கருத்தில் கொண்டு ஆத்திரத்தில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் 3 பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசியது  தெரியவந்துள்ளது. மேலும் முதற்கட்ட விசாரணையில் இவர் மத ரீதியாகவோ, அரசியல் சம்மந்தமாகவோ மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடவில்லை என்பதும், இவர் இவ்வாறு பொது பிரச்சனையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மேலும் விசாரணையில் வினோத் (ஏ) கருக்கா வினோத், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்ற வாளி என்பதும், இவர் மீது ஏற்கனவே 4 கொலை முயற்சி வழக்குகள் உட்பட சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளதும். ஏற்கனவே 2015ம் ஆண்டு R-1 மாம்பலம் காவல் நிலைய எல்லையில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியதும், 2017ம் ஆண்டு E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய வாசலில் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை கொளுத்தி வீசியுள்ளதும், இது தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர் எதிரி வினோத் (எ) கருக்கா வினோத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.