சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  ரவுடி கருக்கா வினோத் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தமிழ்நாடு அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் 25ம் தேதி  சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைநுழைவுவாயில் முன்பு ரவுடி கருக்கா வினோத் என்பவர்  பெட்ரோல் குண்டுகளை வீசினார். இதை கண்ட காவல்துறையினர் அவரை மடக்கி கைது செய்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில்,  அவர் நீட் தேர்வை எதிர்த்து குண்டு வீசியதாக தெரிவித்தார். இவர்மீது  ஏற்கனவே பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜாமின் வந்தவர் பெட்ரோல் குண்டு வீசியது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது.

கருக்கா வினோத் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத்தை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.