டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என  உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்தது.

தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய விலங்குகள் நல அமைப்பான பீட்டா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஏற்கனவே பீட்டாவின் மனுவை ஏற்று ஜல்லிக்கட்டு போட்டி தடை செய்யப்பட்ட நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின்போது, மெரினாவில் கூடிய மக்கள் போராட்டம் காரணமாக, கடந்த 2017-ஆம் ஆண்டில் அதிமுக அரசு சிறப்புச்சட்டம் இயற்றியது. இதை மோடி அரசு ஏற்று, ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கியது. ஆனால், மத்திய அரசு காட்சிப்படுத்ததப்பட்ட விலங்குகள் பட்டியலில் இருந்து இன்னும் மாடுகளை நீக்கவில்லை.

இந்த நிலையில், பீட்டா தரப்பில் மீண்டும்,  ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த கடந்த 2018 பிப்ரவரியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. அதன்படி  உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  தமிழகத்தில் காளைகளை அடக்கும் பாரம்பரிய விளையாட்டை அனுமதித்த மாநில சட்டத்தை எதிா்த்து விலங்குகள் நல அமைப்பான ‘பீட்டா’ உள்பட பல்வேறு அமைப்புகள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை, அரசியல் சாசன அமா்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது. அப்போது, இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கு உள்ள அதிகாரங்கள் தொடா்பாக ஆய்வு செய்யும் தேவை இருப்பதாகக் கூறியிருந்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  தமிழகஅரசு சார்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டது. அதில்,  ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தியதுடன், ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ப்க  அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த பின்னரே ஜல்லிக்கட்டு சட்டம் கொண்டுவரப்பட்டது எனவும் விளக்கம் அளித்துள்ளது.