சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிக்கும் அவகாசம் மார்ச் 3ம் தேதி என்று குறைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. ஆகையால்  திமுக மற்றும் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்கள் மனு அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் பிப்ரவரி 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் 15 ஆயிரம் பணம் செலுத்தி விருப்ப மனு பெற்று, பூர்த்தி செய்து வழங்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அதிமுகவினர் பலரும் விருப்பம் தெரிவித்து விருப்ப மனு அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,  அதிமுக சார்பில் போட்டியிடுவோர் விருப்ப மனு தாக்கல் செய்வற்கான நாள் குறைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர்.

அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை  பொதுத்தேர்தல்; புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்ற பேரவை பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதை முன்னிட்டு, தலைமைக் கழகத்தில் கடந்த 24.02.2021 முதல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளாகப் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு விருப்ப மனு விண்ணப்பப்ப படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

06.04.2021 அன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கால அட்டவணை வெளியிட்டுள்ள நிலையில், கழகத்தின் சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரும் கழக உடன்பிறப்புகளுக்கு 03.03.2021 புதன்கிழமை வரை மட்டுமே விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் என்றும் அவ்வாறு வழங்கப்படும் அனைத்து விண்ணப்பப் படிவங்களையும் பூர்த்தி செய்து அன்றைய தினமே மாலை 5 மணிக்குள் கண்டிப்பாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இக்காலக்கெடு எக்காரணத்தைக் கொண்டும் நீட்டிக்கப்படமாட்டாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.