வாரணாசி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் இந்துக்களுக்குப் பூஜை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஞானவாபி மசூதி உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது,  ஞானவாபி மசூதி, கோவிலை இடித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும், அதை மீண்டும் இந்துக்களிடம் வழிபாட்டுக்காக ஒப்படைக்க வேண்டும் என்றும் வாரணாசி நீதிமன்றம் மற்றும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்கள் தரப்பில் இதை எதிர்த்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்துக்கள் தரப்பில் ஞானவாபி மசூதி இருக்கும் இடம் கோவிலின் ஒரு பகுதி என்று வாதம் முன்வைக்கப்படுகிறது.

இன்று, வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் தெற்கு பகுதியில் இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இங்கு  வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை நியமிக்கவும் காசி விஸ்வநாதர் கோவில் அறக்கட்டளைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வ்ழக்கில் இந்துக்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அடுத்த 7 நாட்களுக்குள் பூஜை நடத்தப்படும் என நீதிமன்றத்தில் தகவல் அளித்துள்ளார். அதேவேளையில் வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக ஞானவாபி மசூதி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.