ராஞ்சி

அமலாக்கத்துறை மீது ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பில் உள்ளார். இந்த மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

நிலமோசடி மூலம் கோடிக்கணக்கான பணத்தைச் சட்டவிரோதமாகப் பரிமாற்றம் செய்ததாக முதல்வர் ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதுவரை இந்த வழக்கில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹேமந்த் சோரனுக்கு இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடந்த 20ம் தேதி அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் ஆஜரானார். அவரிடம் வழக்கு தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன.

நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.அப்போது 36 லட்ச ரூபாய் பணம் மற்றும் பி.எம்.டபிள்யூ. கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத் தி வருகின்றனர். ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரனின் வீட்டிற்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறை மீது முதல்வர் ஹேமந்த் சோரன் ஜார்க்கண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். புகாரில் டில்லியில் உள்ள தனது வீட்டில் அமலாக்கத்துறை சட்டவிரோதமாகச் சோதனை நடத்தி பொருட்களை எடுத்துச் சென்றதாக ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார்.

அந்த புகாரின் அடிப்படையில் ஜார்க்கண்ட்மாநில காவல்துறையினர் வழக்குப் பதிந்துள்ளனர்.