மதுரை: மதுரையின் அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹாலில், சினிமா சூட்டிங் நடத்த நிரந்தர தடை விதித்து  உயர்நீதி மன்றம் மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

மதுரையின் சிறப்பை போற்றும் வரலாற்று அடையாளங்களில் திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் மகாலும் ஒன்று. இந்த காண உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஒளியும், ஒலியும் நிகழ்ச்சி வணண்ண விளக்குகளால் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மஹால் சினிமா சூட்டிங் போன்றவைகளுக்கு வாடகைக்கு விடப்படுவதால், சுற்றுலா பயணிகள் கடுமையான சிரமத்துக்கு ஆளாகி வந்தனர். இதையடுத்து, தொடரப்பட்ட வழக்கில், அங்கு சினிமா சூட்டிங் எடுக்க கடந்த 2011ம் ஆண்டு நீதிமன்றம் தடை விதித்திருந்தது.  அதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின்போது, அனுமதியின்றி குறும்படம் மற்றும் போட்டோ ஷீட் எடுக்கப்பட்டு வந்தது தொடர்பாக வாதங்கள் நடைபெற்றன-

இந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையைத் தொடர்ந்து,  திருமலை நாயக்கர் மகாலில் படப்பிடிப்பு, போட்டோ சூட் எடுக்கவும், டிரோன் பறக்க விடவும் நித்நதர தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திருமலை நாயக்கர் மஹால் வரலாறு:

திருமலை நாயக்கர் அரண்மனையானது அரசர் திருமலை நாயக்கரால் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஐரோப்பிய பாணியின் அடிப்படையில் இந்த அரண்மனை கட்டப்பட்டது. திருமலை நாயக்கர் மஹால் அதன் பெரிய தூண்களுக்கு புகழ் பெற்றது. தூண் உயரம் 82 அடி மற்றும் அகலம் 19 அடி. இன்று காணக்கூடிய கட்டிடமானது, ராஜா வாழ்ந்த பிரதான அரண்மனையாக இருந்தது.  நிஜ அரண்மனை வளாகம் தற்போதைய கட்டமைப்பை விட நான்கு மடங்கு பெரியது. மதுரையில் திருமலை நாயக்கர் அரண்மனை தென்னிந்திய அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மதுரை நாயக்கர்கள் 1545 முதல் 1740 வரை இந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தனர். திருமலை நயாக்கர் (1623-1659) மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் பல்வேறு கட்டடிடங்களை எழுப்பி இருந்தார். அப்போது மதுரை நகரம் இந்திய மற்றும் ஐரோப்பிய வர்த்தகர்களுக்கு ஒரு வர்த்தக நகரமாகத் திகழ்ந்தது. அரண்மனையை கட்டுவதற்கு திருமலை நாயக்கர் ஒரு இத்தாலிய கட்டிடக் கலைஞரை பணியில் அமர்த்தி கட்டியதாக கூறப்படுகிறது.

மீனாட்சி அம்மன் கோயிலின் தெற்கே 2 கிமீ தொலைவில் இந்த அரண்மனை அமைந்துள்ளது.  இந்த அரண்மனை இரண்டு பெரிய பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை ஸ்வர்க விலாசம் மற்றும் ரங்க விலாசம் ஆகும். அரச குடியிருப்பு, தியேட்டர், சன்னதி, அடுக்கு மாடி குடியிருப்பு, கவசம், குளம் மற்றும் தோட்டம் இந்த இரண்டு பகுதிகளிலும் அமைந்து இருந்தன. நடன மண்டபம் அரண்மனையின் முக்கிய இடமாகும். இங்கு தினமும் நடன நிகழ்ச்சிகளை திருமலை நாயர்க்கர் கண்டு கழித்துள்ளார்.

திருமலை நாயக்கர் கட்டிடம் சுன்னம் எனப்படும் சுண்ணாம்பு மற்றும் மென்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை பெறுவதற்காக முட்டையின் வெள்ளை கலந்த கலவையால் கட்டப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு திருமலை அரண்மனை ஒரு தேசிய நினைவுச்சின்னமாக அறிவிக்கப்பட்டு இப்போது தமிழ்நாடு தொல்பொருள் துறையின் பாதுகாப்பின் கீழ் உள்ளது.

இந்த மகாலில் பல ஆண்டுகளுக்கு முன்னர் பராமரத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று நுழைவு நுழைவாயில், மெயின் ஹால் மற்றும் டான்ஸ் ஹால் ஆகியவை பாதுகாப்பான நிலையில் உள்ளன. இந்த அரண்மனை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும். நுழைவு டிக்கெட் விலை ரூ .10 ஆகும். இங்கு, திருமலை நாயக்கரின் பெருமைகளை விளக்கும் வகையில் தினமும் ஒலியும், ஒளியும் நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் மாலை 6.45 மணி முதல் 7.35 மணி வரை ஆங்கிலத்திலும், இரவு 8 மணி முதல் 8.50 மணி வரை தமிழிலும் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.