சென்னை: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பேரறிவாளனின் பரோல் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து உள்ளார்

தமிழ்நாட்டில் திமுக பதவி ஏற்றதும்,  ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் தரப்பில் விடுமுறை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.அதைஏற்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரறிவாளனுக்கு  ஒரு வாரம் விடுமுறை வழங்கினார். இதையடுத்து, அவர் கடந்த மே 28ந்தேதி  தனது சொந்த ஊருக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்டார். இந்த நிலையில் கடந்த வாரம் அவருக்கு திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதற்கிடையில், கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேரறிவாளனுக்கு மேலும் விடுமுறை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.  மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் சிகிச்சைப் பெற விடுப்பு வழங்க வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஒரு மாதம்  பரோல் முடிந்து இன்று புழல் சிறைக்குத் திரும்பிக்கொண்டிருந்த வழியில், பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது என காவல்துறை அறிவித்தது. இதையடுத்து, அவர் மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பினார். அற்புதம்மாளின்  கோரிக்கையை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும்  30 நாட்கள்  பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் உத்தரவுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்து உள்ளார்.  தனது டிவிட்டர் பக்கத்தில், “30 ஆண்டுகளின் தனிமை சிறைவாசம் தந்துவிட்ட மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட உயர் ரத்த அழுத்தம், சிறுநீரக தொற்று, முடக்குவாதம், வயிற்று கோளாறு என தொடர் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையில் கொரோனா தொற்று காலத்தில் சிறையில் இருப்பது பேராபத்து என சிறை அரசு மருத்துவர் அளித்த ஆலோசனை ஏற்று வீட்டிலிருந்தபடி தொடர் மருத்துவம் பெற விடுப்பு வழங்கப்பட்டு தற்போதுதான் மருத்துவம் தொடங்கி உள்ள சூழலில் அது தடைபடாமல் தொடர்ந்திடும் வகையில் அறிவுக்கு விடுப்பு நீட்டிப்பினை கனிவுடன் வழங்கிய மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.