டெல்லி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டணை அனுபவித்து வரும் பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்றுமுதல் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, இந்த விவகாரத்தில் தமிழக கவர்னர் இன்னும் 3 அல்லது 4 நாளில் முடிவெடுப்பார் என்று  தேசிய பாதுகாப்பு துறை (எஸ்.என்.ஜி) சார்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் பிரதமர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 7 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி,  நளினி, பேரறிவாளன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் தற்போது ஆயுள் தண்டனைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். இவர்களுக்கு முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.

இவர்கள்  30 ஆண்டுகளை கடந்தும் சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யும் வகையில், தமிழகஅரசும், சட்டமன்றத்தில் பலமுறை சிறப்பு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியது. மேலும், கடந்த 2018ம் ஆண்டு, ராஜீவ் குற்றவாளிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகளை தமிழக அமைச்சரவை சட்டப்பிரிவு 61 வது பிரிவின் கீழ் முடிவு செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பியது.

ஆனால், தமிழக கவர்னரோ, மத்தியஅரசோ, ராஜீவ் கொலை வழக்க கைதிகளை விடுவிக்க மறுத்து வருகின்றனர். இதற்கிடையில், குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன், ராஜீவ்கொலை வழக்கு விசாரணையில் உள்ள குளறுபடிகளை சுட்டிக்காட்டி, தனக்கும், இந்த கொலைக்கும் சம்பந்தமில்லை, தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் தமிழகஅரசு தன்னை விடுதலை  செய்யலாம் என போட்ட  தீர்மானம் மீது மூன்று ஆண்டுகளாக ஆளுநர் எந்த முடிவும் எடுக்காத நிலையில், உச்சநீதிமன்றம் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி பேரறிவாளன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர் ராவ், அப்துல் நாசீர் உள்ளிட்டோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நேற்றைய விசாரணையின்போது, பேரறிவாளன் விடுதலை செய்வது தொடர்பாக குடியரசுத்தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என மத்தியஅரசு கூறியது. ஆனால், பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும்,  உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து, பேரறிவாளன் விவகாரத்தில்,  மத்தியஅரசு உறுதியான முடிவை தெரிவிக்க அறிவுறுத்திய நீதிபதிகள், வழக்கை இன்றைக்கு ஒத்தி வைத்தனர். அதன்படி இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய பாதுகாப்பு துறை சார்பில், ஆஜரான அரசு வழக்கறிஞர்,  பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில்,  கவர்னர் இன்னும் 3 அல்லது 4 நாளில் முடிவை அறிவிப்பார் என தெரிவித்தார்.

இந்த விசாரணையின் முடிவில் 7 பேர் விடுதலை தொடர்பான முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்கிற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.