சென்னை: கொரோனா ஊரடங்கில் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது; கவனமுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழக அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இன்று தொடங்கியது.  இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் 24 மணி நேர தடுப்பூசி திட்டத்தை தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார்.  சென்னையில் தொடங்கியுள்ள இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 55 இடங்களில் 24 மணி நேரமும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியளார்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  சென்னையைப் பொருத்தவரை ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் 24 மணி நேரமும்  தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம் என்று கூறினார்.

வேலைக்குச் செல்பவர்கள், வெளியூர் செல்பவர்கள் உள்பட பணிக்கு செல்வோர்  பயன்பெறும் வகையில் இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அரசு  கூடுதல்  தளர்வுகள் அளிக்கப்பட்டதால் மக்கள் அஜாக்கிரதையாக இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.