ஸ்ரீவில்லிப்புத்தூர்

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலில் சிலைகள் மற்றும் கொடிமரம் திருடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உலகப் புகழ்  பெற்ற ஆண்டாள் கோவில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் அமைந்துள்ளது.  இந்த கோவிலின் கோபுரம் தமிழக அரசின் சின்னமாக உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.   இந்நிலையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி முத்து ராஜா மதுரையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்த புகாரில் அவர் .

”ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல்யாண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாயிலில் 2 யானை சிலைகள் இருந்தன. அழகான இந்த கற்சிலைகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்து காணவில்லை. மேலும் கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கும்பாபிஷேகத்தின்போது புதிய கொடி மரங்கள் அமைக்கப்பட்டன. 

ஆண்டாள் கோவிலில் உள்ள 3 கொடி மரங்களும் புதிதாக அமைக்கப்பட்டு, பழைய கொடிமரங்கள் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. மற்ற 2 கொடி மரங்கள் மாயமாகி உள்ளன.  எனவே யானை சிலைகள் மற்றும் கொடி மரங்களைக் கடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகளை கண்டுபிடித்துத் தரவேண்டும். 

என்று தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளனர். சுமார் 10  ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் காணாமல் போனதும் அது குறித்து இப்போதுதான் புகார் அளிக்கப்பட்டதும் பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.