டேராடூன்

டேராடூனில்  குளோரின் வாயு கசிவால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஜாஜ்ரா பகுதியில், திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த குளோரின் சிலிண்டர்களில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.  இந்த வாயு காற்றில் கலந்து அப்பகுதி முழுவதும் பரவியதால் அங்குள்ள மக்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு இது குறித்த உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மத்திய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அங்கிருந்த மக்களை மீட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் இந்த வாயுக்கசிவு காரணமாகப் பொதுமக்கள் யாருக்கும் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

மேலும் திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 6 குளோரின் சிலிண்டர்களில், 2 சிலிண்டர்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த சிலிண்டர்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் குளோரின் வாயுவை சுவாதித்தால் கண் எரிச்சல், தலைவலி, சுவாச பிரச்சினைகள் உள்ளிட்டவை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.