திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி மக்கள் அல்வா கொடுத்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கருத்து தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தலில், தொடர் தோல்விகளை சந்தித்து வந்த அதிமுக திடீரென அமோக வெற்றியை கண்டது. இதனை தொடர்ந்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்திற்கு அக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்துக்கொண்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ”தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது எனக் கொக்கரித்தவர்களுக்கு இந்த இடைத்தேர்தல் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம், ஆனால் ஆட்சிக்கு வருவது அதிமுக தான். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு. அல்வா கொடுத்து அதிமுக வெற்றி பெறவில்லை. ஆனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலிலும், 2021 சட்டசபை தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்பதற்கான அங்கீகாரத்தை இடைத்தேர்தல் மூலம் மக்கள் வழங்கியுள்ளனர். இடைத்தேர்தல் மூலம் மக்கள் அதிமுக அரசை விரும்புவதை நிரூபித்துள்ளனர்.

அதிமுகவின் கூட்டணி, பலம் பொருந்தியது. யாரும் எங்களை நெருங்க முடியாது. ஆக்கபூர்வமான கருத்துக்களை கூறமால், போராட்டங்களை ஸ்டாலின் தூண்டி விடுகிறார். ஸ்டாலினின் எண்ணங்கள் அனைத்தும் இடைத்தேர்தல் மூலம் நிராசையாகியுள்ளது. போக்குவரத்து துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழக அரசு விருது பெற்று வருகிறது. ஜெயலலிதா வழியில் இந்த அரசு தொடர்ந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.