நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பகுதியில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேற்றப் படாததால், கறுப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகள் மறு வரையறை செய்யப்பட்டபோது 3-வது வார்டு 2-வது வார்டாக மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த வார்டுக்குகான வாக்குச்சாவடி சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இதை, தங்கள் பகுதியில் அமைக்குமாறு அப்பகுதியைச் சேர்ந்த  ராஜாநகர் பகுதி மக்கள் பல கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அதை மாவட்ட தேர்தல் அதிகாரிகள்  கண்டுகொள்ளததால், இன்றைய தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.

இதையடுத்து, பரமத்திவேலூர் பேரூராட்சி 2-வது வார்டு மக்கள் புறக்கணிப்பு செய்தும், கறுப்புக் கொடி ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வீடுகளிலும் கறுப்புக் கொடி ஏற்றியும், ஆடைகளில் கறுப்பு பட்டை அணிந்தும் தங்களது அதிருப்தியை வெளியப்படுத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த  வருவாய் துறை அதிகாரிகள்,  காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவா்த்தை நடத்தினர். ஆனால், அப்பகுதி மக்கள் தங்களது பகுதியில் வாக்குச்சாவடி அமைத்தால் மட்டுமே வாக்களிப்போம் என்று கூறி போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.