டெல்லி: மக்கள் விரோத 3வேளாண் சட்டங்களை  வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதைத் தொடர்ந்து,  உத்தரபிரதேச மாநிலம் டெல்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகள் ஜிலேபியுடன் கொண்டாடி வருகின்றனர்.

பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,  “நாங்கள் மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடிவு செய்துள்ளோம். வரவிருக்கும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் சட்டத்தை ரத்து செய்வதற்கான செயல்முறையை நாங்கள் முடிப்போம்” என்று  அறிவித்தார்.  விவசாயிகள் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன.  வேளாண் சட்டங்கள், சிறு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கானவை. குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியதோடு, சாதனை அளவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து எவ்வளவோ முயன்றும், சில விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்களின் நன்மைகளை புரிய வைக்க முடியவில்லை இதனால்,  3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்ததுடன், 

விவசாய சட்டங்களுக்கு எதிராக  போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள்  தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்ததுடன், டெல்லி எல்லைப்பகுதிகளில் போராடி வரும் விவசாயிகள்  தங்கள்  இல்லங்களுக்கு திரும்பிச் செல்லுங்கள் என்றும்  வேண்டுகோள் விடுத்தார்.

மத்தியஅரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக  தெரிவித்துள்ள விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி என கொண்டாடி வருகின்றனர். மக்கள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக மன உறுதியுடன் கடந்த ஒரு வருடமாக போராடி வரும் விவசாயிகளின் வெற்றி  என்று புகழப்படுகிறது.

இதையடுத்து,  டெல்லி-காசிப்பூர் எல்லையில் முகாமிட்டு போராடி வந்த விவசாயிகள் சுடச்சுட ஜிலேபி தயாரித்து, அதை மற்றவர்களுக்கு வழங்கி தங்களது வெற்றியை கொண்டாடி மகிழ்கின்றனர். காஜிபூர் எல்லையில் விவசாயிகள் “கிசான் ஜிந்தாபாத்” கோஷங்களுடன் கொண்டாடினர்.