சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாகபொதுமக்கள் தங்களது கருத்துகளை தெரியப்படுத்தலாம் என்றும்,  அதற்கான கால அவகாசம் பிப்ரவரி 25ந்தேதி என திமுக தலைமை அறிவித்து உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை, தொகுதிப்பங்கீடு, தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என பல்வேறு குழுக்களை திமுக தலைமை அறிவித்து உள்ளது. அதன்படி, அந்தந்த குழுக்கள் பணியாற்றி வருகின்றன. தேர்தல் அறிக்கை தொடர்பாக,  திமுக எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதில், உறுப்பினர்களாக  தலைமைக் கழக செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன், சொத்து பாதுகாப்புக்குழுச் செயலாளர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் டி.ஆர்.பி.ராஜா, வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி. செழியன், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், அயலக அணி செயலாளர் எம்.எம்.அப்துல்லா, மருத்துவர் அணி செயலாளர் மருத்துவர் எழிலன், சென்னை மாநகர மேயர் பிரியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு ஏற்கனவே தனது பணிகளை தொடங்கிய நிலையில், தற்போது தேர்தல் அறிக்கை தொடர்பாக பொதுமக்களின் கருத்துக்களை வரவேற்றுள்ளது. மேலும், தொழிற்துறையினர், கல்வியாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கங்கள், சூழலியாளர்கள், மருத்துவர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும் நேரடியாக சந்தித்து அவர்களின் கோரிக்கையை பெற உள்ளனர். அதன்படி இக்குழுவினர்  பிப்.5-ல் தூத்துக்குடி, பிப்.6-ல் கன்னியாகுமரி,பிப்.7-ல் மதுரை, பிப்.8-ல் தஞ்சாவூர், பிப்.9-ல் சேலம், பிப்.10-ல் கோவை, பிப்.11-ல் திருப்பூர், பிப்.16-ல் ஓசூர், பிப்.17-ல் வேலூர், பிப்.18-ல் ஆரணி, பிப்.20-ல் விழுப்புரம், பிப்.21,22,23-ல் சென்னை, ஆகிய நகரங்களுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.

இந்த நிலையில், தற்போது பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக   திமுக தலைமை வெளியிடப்பட்டுள்ள செய்தியில், உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் – DMKManifesto2024-க்கான உங்கள் பதிவுகளை வரவேற்கிறது.

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கவும், மாநில சுயாட்சியை உரத்துச் சொல்வதற்குமான தேர்தல்!

நாடாளுமன்றத் தேர்தல் 2024-க்கான திமுக தேர்தல் அறிக்கையை வடிவமைப்பதில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பை தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு எதிர்பார்க்கிறது!

தங்களின் கோரிக்கைகளை அனுப்பி வைத்து, தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பங்களிக்க முடியும்!

எழுத்துப்பூர்வமாக நீங்கள் சமர்ப்பிக்கலாம்:

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, அண்ணா அறிவாலயம், எண் 367/369, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600018 என்ற முகவரிக்கு கடிதங்கள் மூலமாகவோ அல்லது dmkmanifesto2024@dmk.in-இற்கு மின்னஞ்சல்கள் அனுப்புவதன் மூலமாகவோ உங்கள் பரிந்துரைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். இதன் மூலம் உங்களின் தேவைகளை புரிந்துகொள்வதில் திமுக தேர்தல் அறிக்கைக் குழு மிகவும் ஆர்வமாக உள்ளது.

தொலைபேசி எண் மூலம் பகிருங்கள்:

நீங்கள் நேரடியாக தொலைபேசியில் அழைத்து உங்கள் கருத்துகளைத் தெரிவிப்பதற்காக 08069556900 -இல் ஒரு சிறப்பு ஹாட்லைன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொலைபேசி எண் தொடர்பு மூலம் திமுக தேர்தல் அறிக்கை குழு உங்கள் பரிந்துரைகளை அறிந்து கொள்ளத் தயாராக உள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவிடுங்கள்:

#DMKManifesto2024 என்ற ஹேஷ்டேக்குடன் [@DMKManifesto2024] எங்களுக்கு ட்வீட் செய்யுங்கள் அல்லது உங்கள் பதிவுகளை பேஸ்புக் பக்கம் – DMKManifesto2024 அல்லது வாட்ஸ்அப் எண் 9043299441 மூலம் உங்கள் பரிந்துரைகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

டவுன் ஹால் கூட்டங்களில் பங்குபெறுங்கள்:

வரவிருக்கும் நாட்களில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அறிக்கைக் குழு பயணித்து டவுன் ஹால் கூட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. குழுவின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு, உங்கள் கருத்துகளை நேரில் தெரிவிக்கலாம்.

ஆன்லைன் படிவங்கள் மூலம் சமர்ப்பிக்கலாம்:

இந்த QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம், உங்களின் தேர்தல் அறிக்கை பரிந்துரைகளை ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்!

உங்களின் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் திமுகவின் தேர்தல் அறிக்கையை வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். அவை நம் சமூகத்தின் பல்வேறு தேவைகள் மற்றும் விருப்பங்கள் தேர்தல் அறிக்கையில் எதிரொலிப்பதை உறுதிசெய்யும். வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மைக்கு திமுக அறிக்கை குழு அர்ப்பணிப்புடன் உள்ளது.

தேர்தல் அறிக்கை பதிவீடுகளுக்கான காலக்கெடு 25/02/2024 வரை உள்ளது. அதன் பிறகு, ஒரு விரிவான அறிக்கையை உருவாக்க, பெறப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் திமுக அறிக்கை குழு மதிப்பீடு செய்து அதிகாரப்பூர்வத் தேர்தல் அறிக்கையை வெளியிடும்.

மக்களாட்சி நடைமுறையின் ஒருங்கிணைந்த பகுதியாக நீங்கள் இருப்பதற்கு நன்றி.

தமிழ்நாட்டை சுயாட்சி மாநிலமாகவும், இந்தியாவின் முன்னோடி மாநிலமாகவும் நாம் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.

சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.