புதுடெல்லி: 
பெகாசஸ் விவகாரத்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை  செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலரின் தொலைப்பேசி எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற உளவு செயலி பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும், சம்பந்தப்பட்ட நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் விரிவாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் மத்திய பாஜக அரசு உடன்படவில்லை.
இதனால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம், அமளி, வெளிநடப்பு, ஆர்ப்பாட்டம், பேரணி என பெரும் களேபரமாய் காணப்பட்டது. இதுதொடர்பாக தனது டிவிட்டரில் பதிவிட்டிருந்த மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், ஒளிப்பதற்கு ஒன்றுமில்லையெனில், அவர்கள் ஓடி எங்கோ ஒளிந்தது ஏன்? எதிர்க்கட்சிகள் பரப்புவது அவதூறுகள் என்றால், அவற்றை எகிறி அடிக்க என்ன தயக்கம்? என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில் தற்போதைய, முன்னாள் உள்துறை  செயலாளர்களுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.