பாரிஸ்: உலகக் கால்பந்து கனவு அணியில் பிரேசிலின் பீலே, ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் மாரடோனா, மெஸ்ஸி, போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகையான ‘பாலன் டி ஆர்’, உலகின் ஆல்டைம் சிறந்த வீரர்களைக் கொண்டு, 11 வீரர்களைக் கொண்ட கனவு அணியைத் தேர்வு செய்தது. மொத்தம் 170 நாடுகளைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஆன்லைன் முறையில் பங்குகொண்டு வாக்களித்து, இந்தக் கனவு அணி தேர்வுசெய்யப்பட்டது.

அந்த அணியில் முன்கள வீரர்களாக பிரேசிலின் ரொனால்டோ, அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி மற்றும் போர்ச்சுகலின் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய கள வீரர்களாக, பீலே, மாரடோனா, ஜாவி மற்றும் மத்தாயஸ் ஆகிய 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்காப்பு என்றழைக்கப்படும் பின்கள வீரர்களாக கபு, பெக்கென்பர், பாலோ மால்டினி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். கோல் கீப்பராக தேர்வானவர் ரஷ்யாவின் லேவ் யாஷின்.

இந்த அணியில், பிர‍ேசிலிலிருந்து அதிகபட்சமாக 3 பேர் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கடுத்து அர்ஜெண்டினாவிலிருந்து 2 பேர் தேர்வாகியுள்ளனர்.

இந்தக் கனவு அணியில் தாங்கள் இடம்மபெற்றது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.