சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளைப் பின்பற்றி மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்துங்கள் என கட்சியினருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டுதோறும் ஜன.25-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் வீர வணக்கநாள் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுவதுடன், மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் வழக்கமாக நடைபெறும். இந்த நிலையில்,  மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்தும்போது கொரோனா கட்டுப்பாடு களை முமுமையாக பின்பற்ற வேண்டும் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து  தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோளில், கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சனவரி 25-ஆம் நாள் – மொழிப்போர் தியாகிகள் நாளில் எப்போதும்போல் வீரவணக்கம் செய்ய முடியாத சூழல் நிலவுகிறது. ஆகவே, இந்தி மொழி திணிப்பு எதிர்ப்புப் போரில் ஈடுபட்டு அன்னைத் தமிழ்மொழி காக்க உயிர்த் தியாகம் செய்த தியாகிகளின் படத்தினை மாவட்டக் கழக அலுவலகங்களில் மலர்களால் அலங்கரித்து வைத்து, கழக மாவட்டச் செயலாளர்கள்/பொறுப்பாளர்கள் – முன்னோடிகள் – நிர்வாகிகள் அனைவரும் மரியாதை செய்து வீரவணக்கம் செலுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நிகழ்ச்சியில் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை முழுமையாகக் கடைப்பிடித்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்” என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.