கடந்த 2017-ம் ஆண்டு நார்த்தன் இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் முஃப்டி. போலீசாக ஸ்ரீ முரளி, டான் கதாபாத்திரத்தில் சிவ ராஜ்குமார் மிரட்டியிருப்பார்.

அதன் தமிழ் ரீமேக்கை ரெடி செய்தார் இயக்குனர். ஸ்டுடியோ க்ரீன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரித்த இப்படத்தில் போலீஸ் வேடத்தில் கவுதம் கார்த்திக்கும், ரவுடி ரோலில் சிம்பு நடிக்க ஷூட்டிங் துவங்கியது.

எனினும் சிம்பு சரியாக படப்பிடிப்புக்கு வருவதில்லை, தயாரிப்பு நிறுவனத்துடன் மோதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இணையத்தில் கிளம்பியது. இது போன்ற விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அது என்னவென்றால், முதலில் படத்தை இயக்கிய நார்த்தன் மாற்றப்பட்டு சில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இப்படத்தை இயக்க உள்ளாராம்.

‘முஃப்தி’ ரீமேக்கிற்கு ‘பத்து தல’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு.

பத்து தல என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தின் டைட்டிலில் போஸ்டரை தமிழ் சினிமாவைச் சேர்ந்த 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட்டனர். பத்து தல ராவணன் என்பதற்கேற்ப இந்த படத்தில் சிம்புவுக்கு நெகட்டிவ் கலந்த அதிரடி வேடம் என்கிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தனர்.

மேலும் பத்து தல படத்தில் நடிகர் கலையரசன் புதிதாக இணைந்துள்ளார் என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பத்து தல படத்தில் அமீர் என்ற கேரக்டரில் நடிக்கவுள்ளார். நடிகர் கலையரசனுக்கு கடந்த ஆண்டு ஸ்பெஷல் என்றே கூறலாம். லாக்டவுனில் கெளதம் மேனன் இயக்கிய ஒரு சான்ஸ் குடு பெண்ணே பாடலில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் படத்திலும் முக்கிய ரோலில் நடித்தார்.

இந்த நிலையில் நேற்று வெளியான தகவலின்படி ’பத்து தல’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜனவரி 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ‘பத்து தல’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் புகைபடத்தை நாளை மாலை 6.30 மணிக்கு, இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான் வெளியிடுவார் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டு இருக்கிறது.