சென்னை

ம்னி பேருந்துகள் வண்டலூரில் தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதில்  முதற்கட்டமாகத் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டன. மேலும்  ஜனவரி 24-ந் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த போதிய இடவசதி இல்லை எனவும், போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆயினும், அரசின் உத்தரவை மீறுவோர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தது.

தைப்பூசம், குடியரசு தினத்தையொட்டி தொடர் 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து சொந்த ஊர் மற்றும் கோவில்களுக்குச் செல்ல ஆம்னி பேருந்துகளில் பயணிகள் முன்பதிவு செய்திருந்தனர்.  நேற்று ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க போக்குவரத்துக் கழகம் தரப்பில் அனுமதி வழங்காததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று மதியம் முதலே பதற்றமான சூழல் நிலவியது.

நேற்று மாலை 5 மணி அளவில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளுடன் இயக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டது. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆம்னி பேருந்து வளாகத்தைச் சுற்றி 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு அவர்களுடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பேருந்து நிலையத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.  சுமார் 7 மணி அளவில் முன்பதிவு செய்த பயணிகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செல்ல காவல்துறையினரும், அதிகாரிகளும் அறிவுறுத்தினர். ஆம்னி பேருந்து நிலையத்திற்குள் பயணிகளை அனுமதிக்காததால், பயணிகள் பெரும் குழப்பத்துடன் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்து சென்றனர்.

இரவு நேரத்தில் குடும்பத்துடன் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு வந்தவர்கள் முறையான அறிவுறுத்தலின்றி அலைக்கழிக்கப்பட்டு நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் அரசு பேருந்துகளில் ஏறிச்சென்றனர். ஒரு சில ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கும் எடுத்துச்செல்லப்பட்டன. ஆத்திரம் அடைந்த பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் நேற்று ஆம்னி பேருந்து நிலையம் பதற்றத்துடன் காணப்பட்டது.

இன்று தென் மாவட்டங்களில் இருந்து தற்போது சென்னை வரும் ஆம்னி பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வர விடாமல் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தி கிளாம்பாக்கம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், ஆம்னி பேருந்துகள் தற்போது பயணிகளை கிளாம்பாக்கத்தில் இறக்கிவிட்டுச் செல்கின்றன.  பயணிகள் இதனால் கடும் அவதிக்குள்ளாகினர்;