சென்னை

இந்தியத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 950 பேர் போட்டி இடுகின்றனர் என அறிவித்துள்ளது.

வரும் 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ஆம் தேதி தொடங்கி 27 ஆம்தேதி நிறைவடைந்தது. 27 ஆம் தேதி நிலவரப்படி 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 1,403 பேர் 1,749 மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர்.

கடந்த 28 ஆம் தேதி இந்த மனுக்கள் மீதானபரிசீலனை நடைபெற்றபோது 1,085 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன் தேர்தல் ஆணையம் இறுதி வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.

தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 54 பேர் போட்டியிடுகின்றனர்.  குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 பேர் மட்டுமே போட்டியில் உள்ளனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கையை கட்சி வாரியாக இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 609 சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.