டெல்லி: இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நாடாளுமன்ற அமர்வுகள்  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை மத்தியஅரசு தாக்கல் செய்ய தயாராக உள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, செப்டம்பர் 18ந்தேதி முதல் 22ந்தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டி உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல்நாள் அமர்வு (18ந்தேதி) பழைய பாராளுமன்ற கட்டிடத்தில்  கடைசி அமர்வாக சிறப்பாக நடைபெற்றது. இதில்,  நாடாளுமன்றத்தின் 75 ஆண்டு கால வரலாறுகள் குறித்து பிரதமர் மோடி உள்பட கட்சி எம்.பி.க்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதையடுத்து, நாடாளுமன்ற கூட்டத்தொடர் இனிமேல், அதாவது இன்றுமுதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில்  கூடுகிறது.. இந்த சிறப்பு கூட்டத்தொடரில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க மசோதாக்களை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.

பொதுவாக இந்திய பாராளுமன்றம், பட்ஜெட் கூட்டத்தொடர் (ஜனவரி முதல் மார்ச் வரை), மழைக்கால கூட்டத்தொடர் (ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள்) மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் (நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்கள்) என 3 கூட்டத்தொடருக்காக கூட்டப்படும்.  அதன்படி நடப்பாண்டு (2023)  ஆகஸ்ட் 11ந்தேதியுடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. அதைத்தொடர்ந்து தற்போது  சிறப்பு கூட்டத்தொடர்  தொடங்கியுள்ளது.  செப்டம்பர் 18ந்தேதி வரை பாராளுமன்றத்தின் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வந்த அலுவல்கள் செப்டம்பர் 19ந்தேதி  முதல் புதியதாக கட்டப்பட்டு சமீபத்தில் திறந்து வைக்கப்பட்ட பாராளுமன்ற புதிய கட்டிடத்தில் தொடங்குகிறது.

இந்த கூட்டத்தொடரில் விவாதத்திற்காக எடுத்து கொள்ளப்படவிருக்கும் மசோதாக்கள் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் தொடர்பான 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதா, வழக்கறிஞர்கள் (திருத்தம்) மசோதா 2023, பத்திரிக்கைகள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2023, அஞ்சல் அலுவலக மசோதா 2023 மற்றும் மூத்த குடிமக்கள் நல மசோதா 2023 ஆகியவை பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.

“ஒரே நாடு, ஒரே தேர்தல்” மற்றும் “இந்தியா எனும் பெயரை பாரத் என மாற்றம் செய்வது”, யூனியன் சிவில் கோடு (பொது உரிமையியல் சட்டம்) போன்றை தாக்கல் செய்யப்படுவது தொடர்பான தகவல்கள் இதுவரை  வெளியாகவில்லை.