டெல்லி: காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில்,  இந்திய தூதரை கனடா வெளியேற்றி நடவடிக்கை எடுத்த நிலையில், பதிலடியாக கனடா தூதரை இந்திய அரசு வெளியேற்றி உள்ளது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில்,  இந்தியாவில் தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்காவாத அமைப்பின்  தலைவர் ஹர்தீப் சிங் நிஜர் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள சீக்கிய கலாச்சார மையத்திற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலையில் இந்திய ஏஜென்ட்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் குறிப்பிட்டிருந்தார்.  இதைத்தொடர்ந்து இரு நாடுகளுக்குமை இடையே சலசலப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான  கனடா அமைச்சரவையில் உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கனடா உளவு அமைப்புகள் விசாரணையைத் தொடங்கியுள்ளன என தெரிவித்துள்ளார். நிஜ்ஜார் ஒரு சுதந்திரமான சீக்கிய தாயகத்திற்கான வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார் என்றதுடன்,   இந்த கொலைக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் தொடர்பு இருக்கும் என கனடா பிரதமர் குறிப்பிட்டார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ட்ரூடோ தனது உரையின் போது, ​​G20 உச்சிமாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் இது தொடர்பாக பேசப்பட்டது என குறிப்பிட்டார். இந்திய அரசாங்கத்தின் எந்தவொரு தலையீடும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதமர் மோடியிடம் தெரிவித்ததாகவும், தற்போது நடைபெறும் விசாரணைக்கும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் கூறியதாக கனடா பிரதமர் கூறியிருந்தார்.

இதற்கு இந்திய அரசு சார்பில் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய முகவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கனேடிய அரசாங்கத்தின் அபத்தமான குற்றச்சாட்டு என கூறியதுடன், இது தொடர்பாக “கனடா பிரதமரின் அறிக்கையையும், அவர்களின் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையையும் நாங்கள் நிராகரிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டதுடன்,

கனடாவில் எந்தவொரு வன்முறைச் செயலிலும் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் அபத்தமானது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு.  கனடா கூறும் இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு  தொடர்ந்து அச்சுறுத்தல் கொடுக்கும் வகையிலும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் நடத்தும் பயங்கரவாத செயல்களை திசை திருப்பவுமே உதவும்.

கனடா அரசியல் பிரமுகர்கள் இத்தகைய கூறுகளுக்கு வெளிப்படையாக அனுதாபத்தை வெளிப்படுத்தியிருப்பது ஆழ்ந்த கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. கனடாவில் கொலைகள், மனித கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடம் கொடுக்கப்பட்டிருப்பது புதிதல்ல. கனடாவில் இருந்து செயல்படும் அனைத்து இந்திய-விரோதக் கூறுகளுக்கும் எதிராக விரைவான மற்றும் பயனுள்ள சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று  தொரிவிக்கப்பட்டிருந்தது.

கனடாவில் 7,70,000 க்கும் அதிகமான சீக்கிய மக்கள் உள்ளனர் அதாவது மொத்த மக்கள் தொகையில் சுமார் 2% ஆகும்.  இந்த நிலையில், திடீரென கனடா அரசு, கு கடனாவில்  உள்ள இந்திய தூதர் ஒருவரை வெளியேற்றியது. இது இந்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கனடா நாட்டைச் சேர்ந்த தூதரை இந்தியாவில் இருந்து மத்தியஅரசு வெளியேற்றி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவிற்கான கனடா தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த 5 நாட்களுக்குள் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டு சொத்துக் குறிப்பில், இந்தியாவிற்கான கனடா தூதர் இன்று நேரில் வரவழைக்கப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட கனடா தூதரக அதிகாரியை வெளியேற்றுவது குறித்து மத்திய அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட தூதர் அடுத்த ஐந்து நாட்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.