சென்னை:

மிழகத்தில் வரும் 18ந்தேதி  பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  அனைத்து மாநில அரசுகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், ‘வாக்குப்பதிவு முடியும் வரை உள்ள 48 மணி நேரங்களுக்கு மதுபான கடைகள் அடைக்கப்பட வேண்டும். அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளிலும் மதுக்கடைகள் அடைக்க வேண்டும்’ என அறிவுறுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிகத்தில்  மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கமிஷனர், ‘வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாட்களில் மதுபானம் உற்பத்தி செய்யவோ, விற்கவோ, எடுத்து செல்லவோ கூடாது’ என்று அறிவித்து உள்ளார்.

அதைத்தொடர்ந்து தமிழகத்தில்  சுதந்திரமான, நியாயமான, அமைதியான முறையில் பாராளு மன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடத்த வேண்டும் என்ற வகையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மது பானங்கள் விற்பனை செய்ய தடை விதித்தும், பார்களை மூடவும் அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதுகுறித்து டாஸ்மாக் மேலாண்மை இயக்குனர் ஆர்.கிர்லோஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தமிழக அரசின் உத்தரவுக்கு ஏற்ப தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான கடைகளும், அதோடு இணைக்கப்பட்டுள்ள பார்களும் வருகிற 16, 17, 18 ஆகிய நாட்களிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே மாதம் 23-ந்தேதியும் மூடப்படும்.

இந்த உத்தரவுப்படி அனைத்து மதுபான டெப்போக்கள், கடைகள் மற்றும் பார்கள் மேற்சொன்ன நாட்களில் அடைக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.