சென்னை:

திமுகவில் இருந்து அதிமுகவிற்கு தாவிய முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது.

பரிதி இளம்வழுதி டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததால் பரிதி இளம்வழுதி உள்பட தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரையும்,  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நீக்கி உள்ளனர்.

சென்னை  ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு எதிராக  சுயேச்சையாக களமிறங்கிய டிடிவி தினகரன் வெற்றிபெற்றார். இதைத்தொடர்ந்தே அதிமுகவில் உள்ள   டிடிவி தினகரனின் ஆதரவாளர்களை இபிஎஸ் ஓபிஎஸ் தலைமையிலான  இணைந்த அதிமுக அதிரடியாக நீக்கி வருகிறது.

ஏற்கனவே. கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக  முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர்களை  அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், ஏற்கனவே திமுக ஆட்சியின்போது அமைச்சராக இருந்தவரும், பின்னாளில் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தவருமான பரிதி இளம்வழுதி, தற்போது டிடிவியின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.

இதன் காரணமாக , பரிதி இளம்வழுதியையும், மற்றும் அவரது ஆதரவாளர்களான  தென் சென்னை தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலரையும் நீக்கி  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.