கடலூர்: ஊராட்சி மன்ற தலைவரை தரையில் உட்கார வைத்த சம்பவத்தில், ஊராட்சி செயலாளர் சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அருகே தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி பட்டியலினத்தை சேர்ந்தவர். இந்நிலையில் ஜூலை 17ம் தேதி ஊராட்சிமன்ற கூட்டம் நடந்தது. அப்போது கூட்டத்தில் ஊராட்சி தலைவர், ஊராட்சி துணை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர்.
கூட்டத்தின் போது ராஜேஸ்வரி தரையில் அமர வைக்கப்பட்டுள்ளார். அவர் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அவமதிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையடுத்து, தெற்கு திட்டை ஊராட்சி துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிந்துஜா மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  சிந்துஜாவை ஆட்சியர் சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார். பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிந்துஜா வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.