சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை வண்டலூர் மேம்பாலத்தை திறந்து வைத்த நிலையில், தொடர்ந்து பல்லாவரம் மேம்பாலத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து ராஜீவ்காந்தி சாலையில், டைடல் பார்க் அருகே புதிய மேம்பாலத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  கடந்த 2011-12ம் ஆண்டிற்கான நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் மானியக் கோரிக்கையின் போது,  ஜி.எஸ்.டி. சாலையில் பல்லாவரம் பகுதியில் குன்றத்தூர் சாலை சந்திப்பு, சந்தை சாலை சந்திப்பில் ஓர் மேம்பாலம் கட்டப்படும் என்று தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 80 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வர் இன்று திறந்மது வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, இளையனார் குப்பத்தில் பழுதடைந்த பாலத்திற்கு மாற்றாக 23 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நான்குவழி உயர்மட்டப் பாலம் மற்றும் புதுப்பட்டினம் புறவழிச்சாலை;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கீழ்மாம்பட்டுவில், விக்கிரவாண்டி – கும்பகோணம் – தஞ்சாவூர் சாலையில் 1 கோடியே 75 லட்சம் ரூபாய் கட்டப்பட்டுள்ள பாலம் மற்றும் வேப்பூர் வட்டம், காட்டுமயிலூரில் காட்டுமயிலூர் – கொங்கராம்பாளையம் சாலையில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ரோட்டுப்புதூரில், கள்ளிமந்தயம் – ஓடைப்பட்டி சாலையில் 2 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம்;

என மொத்தம் 165 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலங்கள், புறவழிச்சாலை, பாலங்கள், உயர்மட்டப் பாலம் ஆகியவற்றை  இன்று திறந்து வைத்தார்.

மேலும், சென்னை மாவட்டம், ராஜீவ் காந்தி சாலையில், டைடல் பார்க் சந்திப்பு மற்றும் இந்திரா நகர் சந்திப்பு ஆகிய இடங்களில் 108 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 2 ””யூ” வடிவ மேம்பாலங்கள் அமைக்கும் பணிக்கு  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று அடிக்கல் நாட்டினார்கள்.

அதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற்று வரும் பல்வேறு பாலப் பணிகளை பட்டியலிட்ட முதல்வர் பழனிசாமி.  சென்னை மாநகரம், அதையொட்டிய புறநகர்ப் பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னைக்குள்ளும், சென்னையிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்வதற்கும் அம்மாவின் அரசு பல்வேறு பாலங்களை கட்டிக் கொடுத்திருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.