திருப்பூர்: சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில் படி அரிசி நெல் வைக்கப்பட்டுள்ளதால்,  உணவுப்பொருட்களின் விலைவாசி உயரும் வாய்ப்பு இருப்பதாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே அமைந்துள்ள  சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில்  பிரசித்தி பெற்றது. இந்த ஸ்தலம் சிவவாக்கிய சித்தரால் பாடல் புகழ்பெற்ற ஸ்தலம்.  இங்கு, ஆண்டவன் உத்தரவு பெட்டி அமைந்துள்ளது.  இந்த பெட்டியில் என்ன வைக்க வேண்டும் என்பது குறித்து, சிவன்மலை ஆண்டவர், பக்தர்களின் கனவில் வந்து குறிப்பால் உணர்த்துவார். அதைத்தொடர்ந்து,  அது தொடர்பான பொருட்களை உத்தரவு பெட்டியில்  வைத்து வழிபாடு நடைபெறுகிறது.

பக்தர்களின் கனவில் சிவன்மலை ஆண்டவர் வந்து குறிப்பிட்ட பொருளைக் கொண்டு வந்து தருமாறு கேட்டுக் கொள்வதனின் அடிப்படையில், பக்தர் கூறும் தகவலை அர்ச்சகர்கள் சுவாமி சன்னிதானத்தில் வெள்ளை மற்றும் சிவப்பு பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். வெள்ளை பூ வந்தால் மட்டுமே அந்த பொருள் கண்ணாடி பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும். பூஜை செய்யப்படும் பொருட்களின் காரணமாக நாட்டில் அந்த பொருள் தொடர்பாக பெரும்பாலும் ஆக்கம் அல்லது அழிவு போன்ற செயல்கள் நடைபெறும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

அதன்படி  சிவன்மலை பெட்டியல் வைக்கப்படும்  பொருட்களினால் , நாட்டில் ஏற்படும் நன்மை, தீமை ஏற்படுவது குறித்தும் பக்தர்களிடையே பல்வேறு நம்பிக்கை உள்ளது. இதுவரை மண், துப்பாக்கி, ஏர் கலப்பை, ரூபாய் நோட்டு, புத்தகம், சைக்கிள், அரிசி, மஞ்சள், இளநீர், தங்கம், சர்க்கரை ஆகியவை வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளன. அதுபோல,   தங்கம் வைத்து பூஜை செய்தபோது அதன் விலை உச்சத்தை தொட்டது. மண் வைத்து பூஜை செய்தபோது நிலங்களின் மதிப்பு அதிகமானது. தண்ணீர் வைத்து பூஜை செய்யப்பட்டபோது சுனாமி ஏற்பட்டது. கணக்கு நோட்டு வைத்து பூஜை செய்தபோது மத்திய அரசு கருப்புப் பணஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் அமாவாசை தினமான  நேற்று  ஆண்டவன் உத்தரவு பெட்டிக்குள் நிறைபடி நெல் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நிறைபடி நெல் வைத்து பூஜை செய்யப்பட்டிருந்தது. இதன் பின்னர் மீண்டும் தற்போது நெல் வைக்கப்பட்டு இருப்பதால், அரிசியின் விலை உயரும் அல்லது குறையும் என பக்தர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.