சென்னை: பிஏ4, பிஏ5 வகை கொரோனா தமிழகத்தில் வேகமாக பரவுகிறது என்றும் சென்னையில் 112 தெருக்களில் கொரோனா பாதிப்பு உள்ளது என்றும்  அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். மேலும், 31-வது மெகா தடுப்பூசி முகாம் ஜூலை மாதம் 10-ம் தேதி நடைபெறும் என்றும் கூறினார்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட 173வது வட்டம் அடையார் கஸ்தூரிபாய் நகரிலுள்ள அபிராமி அப்பார்ட்மெண்டில் கொரோனா பாதித்த நபர்களின் மருத்துவம் குறித்து விசாரித்தார். பின்னர் அப்பகுதி மக்களின் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அதைத்தொடர்ந்து,  கீழ்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் உறுப்புதான முகாம் துவக்கி வைத்ததுடன், மற்றும் தீக்காய விழிப்புணர்வு காணொளி தொடர்பான வீடியோவையும் வெளியிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர், உலகம் முழுவதும் தினசரி 10 ஆயிரம் முதல் 1லட்சம் வரையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது என்றவர்,  தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்து வருகிறது. அந்த வகையில் சேலம், நாமக்கல், சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழகத்தில் தினசரி தொற்று பாதிப்பில் 50 சதவீதம் பேர் சென்னையில் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் 112 தெருக்களில் 3 பேருக்கு மேலும், 25 தெருக்களில் 5 பேருக்கு மேலும் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் 2,225 பேர் சென்னையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிப்படுத்தி சிகிச்சை பெறுகின்றனர். இவர்களை சென்னை மாநகராட்சி நிர்வாகம் 3ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கின்றனர்.

வீடுகளில் இடவசதி இல்லாதவர்கள் என்ற அடிப்படையில் 5 பேர் மட்டுமே சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். 8சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.

தற்போது பரவி வரும் கொரோனா தொற்றில்  பெரும் பகுதி பிஏ4, பிஏ5 என்ற வகை கரோனாவாக தான் உள்ளது. இவை வேகமாக பரவும் தன்மை உடையது என்பது நிருபணமாகி இருக்கிறது. தமிழகத்தில் வருகிற ஜூலை மாதம் 10-ம் தேதி 1 லட்சம் இடங்களில் 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.