டில்லி

பாஜக நிர்வாகிகள் முஸ்லிம்களுக்கு எதிராக பேசுவதை முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கிடைத்தது பற்றிய டிவி விவாதத்தில் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான நுபுர் சர்மா பங்கேற்றார். அவர் அப்போது முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறினார்.  அவருடைய கருத்துக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

இதனால் நேற்று அவரை கட்சியில் இருந்து தற்காலிக நீக்கி பாஜக தலைமை நடவடிக்கை எடுத்தது. இதைப் போல் டில்லி பாஜக செய்தி தொடர்பாளரான நவீன் ஜிண்டால் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாக கூறி, அவரை கட்சியில் இருந்து பாஜக நீக்கி உள்ளது

முன்னால் மத்திய அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டரில்,

”பாஜகவை உள்நாட்டு விமர்சனங்கள் எதுவும் இந்த இருவருக்கும் எதிராக செயல்படத் தூண்டவில்லை.   மாறாக சர்வதேசப் பின்னடைவுதான் பாஜகவை நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. இஸ்லாமிய விரோதக் கருத்தை முதலில் விதைத்தவர்கள் நுபுர் சர்மாவோ, நவீன்குமாரோ அல்ல. இஸ்லாமோஃபோபியாவின் அசல் படைப்பாளிகள் நுபுர் சர்மாவும், நவீன்குமாரும் அல்ல.  தங்கள் எஜமானர்களை விட கூடுதல் விசுவாசத்தைக் காட்ட முயன்றுள்ளனர்” 

எனப் பதிந்துள்ளார்.