கோவா மாநில சட்டமன்ற தேர்தல் 2022 ம் ஆண்டு நடைபெற இருக்கிறது.

தற்போதய சட்டமன்றத்தின் பதவிக்காலம் மார்ச் மாதம் 15-ம் தேதி நிறைவடைவதைத் தொடர்ந்து அதற்கு முன்னதாக அங்கு தேர்தல் நடக்க இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி சார்பில் அம்மாநில தேர்தல் பொறுப்பாளராக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ப. சிதம்பரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

2017 ம் ஆண்டு தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 17 தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இருந்தபோதும், 13 தொகுதிகளில் வென்ற பா.ஜ.க., மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, கோவா பார்வார்டு கட்சி மற்றும் மூன்று சுயேச்சை உறுப்பினர்களின் உதவியுடன் மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சி அமைத்தது.

காங்கிரஸ் கட்சி அதிக எண்ணிக்கையிலான தொகுதிகளில் வெற்றி பெற்ற போதும் ஆட்சியமைக்க முடியாமல் போனதற்கும், பின்னர் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் பின் ஒருவராக பா.ஜ.க.வுக்கு தாவிய நிலையில் தற்போது கட்சியின் பலம் நான்காக குறைந்துள்ளது.

இந்நிலையில், கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ப. சிதம்பரம் “நாம் கடந்த காலத்தை மாற்ற முடியாது, கடந்த காலத்தை மீண்டும் எழுத முடியாது.

காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் சொல்லக்கூடியது என்னவென்றால், நடந்ததற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம், மேலும் இது போன்ற ஒரு அத்தியாயம் மீண்டும் நடக்காமல் பார்த்துக்கொள்வோம்” என்று பேசினார்.